கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் மீண்டும் நியமனம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர பேராசிரியர் சரித ஹேரத்தின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இதனை வழிமொழிந்தார்.

பேராசிரியர் சரித ஹேரத் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.
பாராளுமன்றத்தின் 120 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, கலாநிதி சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர, டி.வீ. சானக, இந்திக அனுருத்த ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹகீம், கலாநிதி சுசில் பிரேமஜயந்த, அநுர திசாநாயக்க, பாட்டளி சம்பிக ரணவக்க, ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, நலீன் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார், பிரேம்நாத் சி. தொலவத்த, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், மதுர விதானகே, சாகர காரியவசம், பேராசிரியர் சரித்த ஹேரத் ஆகியோர் இக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கூட்டத்தொடரில் கோப் குழுவின் உறுப்பினராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இம்முறை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் இறுதிக் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அறிக்கை இக்கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கும் உறுப்பினர்கள் அனுமதி வழங்கினர்.

கடந்த கூட்டத்தொடரில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்ட நிலையில், அந்நிறுவனங்களை மீண்டும் அழைப்பதற்கும் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

எதிர்காலக் கூட்டத்திற்கு அழைக்கப்படும் நிறுவனங்கள் தொடர்பில் முன்னுரிமைப் பட்டியலைத் தயாரிப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது.

பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத்தினால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஏதேனும் எழுத்திலான சட்டத்தினால் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தொழிலின் அல்லது வேறு பொறுப்பு முயற்சியின் கணக்குகளை கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கடமையாகும்.

இன்றைய கூட்டத்தில் அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன, கலாநிதி சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர்களான ஜயந்த சமரவீர, டி.வீ. சானக, இந்திக அனுருத்த ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, பாட்டளி சம்பிக ரணவக்க, ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, பிரேம்நாத் சி. தொலவத்த, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், மதுர விதானகே, சாகர காரியவசம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles