ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக்கட்சி கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றது. தமது கட்சிக்கு உரிய கவனிப்புகள் இல்லை என சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றனர். எனினும், ஆளுங்கூட்டணியிலிருந்து வெளியேறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அக்கட்சி எதனையும் அறிவிக்கவில்லை.
ஆனாலும் சு.கவிலுள்ள ஒரு சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தனித்து அல்லது எதிரணியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கவேண்டும் என்ற யோசனையும் சுதந்திரக்கட்சிக்குள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளதுஇவ்வாறானதொரு பின்புலத்திலேயே அக்கட்சியின் மத்தியசெயற்குழு கூடுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச வேண்டிய விடயங்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்படவுள்ளது.