” இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவி காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. ஐந்தாண்டுகளுக்கே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்துக்கும் ஐந்தாண்டுகள்தான் மக்கள் ஆணை உள்ளது. இக்காலப்பகுதியில் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புகளை அரசு உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆட்சிகாலத்தை நீடிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
இந்த அரசை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும். கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போது எமது பலத்தையும் காட்டுவோம்.” – என்றார்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன அல்லது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகுவதற்கான சாத்தியம் உள்ளது எனக்கூறப்படுகன்றதே என்ற கேள்விக்கு,
” சஜித் பிரேமதாசவே எமது எதிர்க்கட்சித் தலைவர். நாம்தான் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரியக்கட்சி. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சவாலுக்குட்படுத்த முடியாது. வருங்கால ஜனாதிபதியும் அவர்தான்.” – என்று பதிலளித்தார் திஸ்ஸ அத்தநாயக்க.










