சிங்கள மொழியில் மாத்திரம் பொலிஸ் கட்டளையினை பொலிஸார், கொண்டுவந்ததால் அதனை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை பொலிஸார் இன்று வழங்கியிருந்தனர்.
அந்த கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததால் சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே இந்த கட்டளையினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி அவர்களிடம் மீளக் கையளித்தார்.
இதனையடுத்து அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்திற்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம்தான் வழங்க முடியுமே தவிர நீதிமன்றத்திற்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரினால் வழங்கமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் வினவிய போது பொலிஸார், அமைதியாக இருந்தனர்.
