முப்பது வருடங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பியவர், கோவிட் காலத்தில் வேலையிழந்து அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாத நிலையில், சிறைக்கு சென்றால் மூன்று நேர சாப்பாடாவது கிடைக்குமென பொலீஸில் சரணடைந்துள்ளார். இந்தச்சம்பவம் விக்டோரியாவில் இடம்பெற்றுள்ளது.
கஞ்சா வளர்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர், 23 மாதங்களின் பின்னர் கிராவ்டன் சிறையிலிருந்து தப்பியிருக்கிறார்.
டகி என்ற பெயரில் மெல்பேர்ன் அவலோன் பகுதியில் சிறு தொழில்களை செய்துவந்தவர், முப்பது வருடங்களாக யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். கோவிட் பெருந்தொற்றினால் இவர் வேலையை இழந்து தனிமரமானார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல், அவலோன் கடற்கரையில் படுத்து எழுந்தார்.
தப்பிவந்த சிறைவாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினால், அங்கு மூன்று வேளை சாப்பாடாவது கிடைக்கும் என்று டீ வை பொலீஸ்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். இவருக்கு தற்போது வயது 64. மீண்டும் சிறைசென்றுள்ள டகி, மீதமுள்ள 13 மாத கால சிறைத்தண்டனையை நிறைவு செய்துகொண்டு விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சிறையிலிருந்தபோது, காவலர்களாக பணிபுரிந்தவர், டகி மேலதிகமாக தண்டிக்கப்படக்கூடாது என்று வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.