மலையகத்தில் ஆறுகள், நீரூற்றுக்கள் , நீர்வீழ்ச்சிகள் என நீர்வளம் காணப்பட்டாலும் ஒரு சில தோட்டங்களில் வாழும் மக்கள் பல வருடங்களாக ஒரு கிளாஸ் சுத்தமான நீருக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இன்னும் தொன்று தொட்டு தொடர்கதையாகத்தான் இருக்கின்றன.இதற்கு நுவரெலியா மாவட்டம் லிந்துலை டிலிகுற்றி தோட்ட மக்களும் விதிவிலக்கல்ல.
இத்தோட்டத்தில் 35 குடும்பங்களை சேர்ந்த 160க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும் குடிநீர் வசதி இல்லாமல் திண்டாடுகின்றனர்.
ஒரு குழாயில் வரும் சொட்டு நீருக்காக குடங்களை வைத்துக்கொண்டு பல மணி நேரம் காத்து இருப்பதோடு தங்களின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு ஒரு கற்குகைக்குள் வரும் ஊற்று நீருக்காக ஒவ்வொரு நாளும் தனது உயிரினை துச்சமென நினைத்து பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் அந்த இடத்தில் இருந்து நீரை பெற்று வருவது வேதனை தரும் விடயமாகும்
முதியோர்கள் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இப்பிரச்சனை தொடர்பாக அரசியல்வாதிகளிடம் தோட்ட நிர்வாகமும் அறிவித்த போதிலும் இதுவரை யாரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன் விசேட நிருபர்










