இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தை அவிசாவளைக்கு இடமாற்றம் செய்வது தொடர்பான திட்டத்தை மறுபரீசிலனை செய்யுமாறு செந்தில் தொண்டமான்விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
சப்ரகமுவ மாகாண தொழில் திணைக்களத்தை அவிசாவளைக்கு இடமாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
தொழில் பிணக்குகளை தீர்த்துக்கொள்ளல் உள்ளிட்ட இதர பல தேவைகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழில் திணைக்களத்தை நாடுகின்றனர். திணைக்களத்தை இடமாற்றம் செய்வதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் செந்தில் தொண்டமானால், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
அதன் அடிப்படையில் தோட்டப்புறங்களில் பணியாற்றும் அதிகமானோர் தொழில் திணைக்களத்துக்கு வருகை தருவதாகத் தெரிவித்த அமைச்சர், செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கியுள்ளார்.
நிர்வாக ரீதியிலான செயற்பாடுகள் மாத்திரம் அவிசாவளை மத்திய நிலையத்தில் இடம்பெறும் எனவும் ஏனைய அனைத்து விடயங்களும் இரத்தினபுரி திணைக்களத்தில் இடம்பெறும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.