தேயிலைத் தோட்டத்தில் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

தேயிலை மலையில் பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள், சடலம் ஒன்றைக் கண்டு தோட்ட நிர்வாகத்திற்கும் , மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, உயிரிழந்தவர் ஹப்புகஸ்தென்ன தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருடைய மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதவான் வருகை தந்து பார்வையிட்டதுடன், ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து சான்றுகளைச் சேகரித்துள்ளனர்.

அதன் பின்னர், சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) நடத்தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்-

Related Articles

Latest Articles