செம்மணிப் புதைகுழிக்கு அருகில் வெட்டப்பட்ட கால்வாயில் என்புச் சிதிலங்கள் அவதானிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழிக்கு அருகாக தற்காலிகமாகக் கால்வாய் அமைக்கும் பணிகளை முன்னெடுத்த போது, அதற்குள் மூன்று இடங்களில் என்புச்சிதிலங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் மனிதப் புதைகுழியைச் சூழவுள்ள பகுதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், மனிதப் புதைகுழியில் மழைநீர் தேங்கவிடாது வெளியேற்றுவதற்காக தற்காலிகமாகக் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டது. அண்ணளவாக 20 மீற்றர் நீளமுள்ள கால்வாய் இவ்வாறு அமைக்கப்பட்ட நிலையில், அதற்குள் மூன்று வெவ்வேறு இடங்களில் மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கால்வாய் வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தப் பகுதியையும் இணைத்து அகழ்வுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது, மேலும் ஐந்து என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தால் செம்மணிப் புதைகுழியில் இதுவரை 52 சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.