ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர் நியமனம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்தார்.

லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் மற்றும் இந்தியாவுக்கன  பணிப்பாளர் பென் மெல்லர் (Ben Mellor),   பிரித்தானிய இளவரசரின்  விசேட பிரதிநி  உப லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன் (Dave Easton)  மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வரவேற்றனர்.

நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (21) அதிகாலை நாடு திரும்பவுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பும்வரை, தனக்கு கீழ் உள்ள அமைச்சுகளின் இராஜாங்க அமைச்சர்களை பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

இதன்படி,  பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன், நிதி, பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளின் பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக கீதா குமாரசிங்க,  தொழில்நுட்ப பதில் அமைச்சராக கனக ஹேரத் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக திலும் அமுனுகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles