தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் காணி உரிமைகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஜனாதிபதி மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களில் மலையக மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர் – என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும், நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று மலையக மக்களின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு வருகை தந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். கடந்த வருடம் இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தாலும், எதிர்கட்சியில் உள்ளவர்கள் அரசியல் காரணங்களுக்காக அதில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் இம்முறை அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தற்போது ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிபெற்று வருகின்றமை குறித்து அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இதன் காரணமாக இப்போது எங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் கூட நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நாம் பல்வேறு சிக்கல்களை கடந்து வந்துள்ளோம். எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்த ஒத்துக்கொண்டுள்ளன.
அடுத்த மாதம் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதில் முழுமையான தீர்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், எமது நீண்டநாள் கோரிக்கையின் பிரகாரம் காணி உரிமை விடயம் தொடர்பில் ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அது குறித்து இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. மலையகத்தில் அதிகளவான குடும்பங்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் இருப்பதால்தான் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி நலன்கள் அந்த மக்களுக்கு சென்றடைவதில்லை.
இதற்கு காரணம் மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கிடைக்க முன்னர் மேற்கொள்ளப்பட்ட காணி எல்லை நிர்ணயத்தில் உள்ள சிக்கல் நிலையாகும். அதனால் மலையக மக்களின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கவே மலையகப் பிரதேசங்களை கிராமங்களாக அங்கீகரிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலையக மக்களுக்கு வீட்டு உரிமையே முதலில் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால், வீட்டு உரிமை என்பது வேறு. காணி உரிமை என்பது வேறு. காணி உரிமை வழங்கப்பட்டால் வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய வசதி உள்ளவர்கள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் உரிமை கிடைக்கும். மலையக மக்களுக்காக 4000 மில்லியன் நிதி கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியின் ஊடாக 1000 காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். ஏற்கனவே வீடுகள் இருந்தும் காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
எனவே சரியான தீர்மானங்கள் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பியவருக்கே எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என்பதே எனது தனிப்பிட்ட நிலைப்பாடாகும்” என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.










