ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அஞ்சமாட்டோம். அதனை நிராகரிக்கின்றோம்.மேற்படி தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கைக்கு எதிராக பிரிட்டன், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளே பிரேரணை கொண்டுவந்தன. அதில் ஒரு நாட்டைத்தவிர ஏனையவை நேட்டோ நாடுகளாகும். இந்நாடுகளே அரபு வசந்தம் என்ற போர்வையில் ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான், யேமன் ஆகிய நாடுகளில் அழிவை ஏற்படுத்தின, ஏற்படுத்தியும் வருகின்றன. யேமனில் இன்று நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பிரிட்டன் மற்றும் ஜேர்மன் நாட்டுக்குரியவையாகும்.
இவ்வாறு உலகில் இடம்பெறும் பாரிய போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய நாடுகளே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைத்தன. அப்பிரேரணை சட்டவிரோதமாகும்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் இரு நாடுகளுக்கிடையிலான போர் கிடையாது. எனவே, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மட்டுமே இதனுடன் தொடர்புபடும். அந்தவகையில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. எமது நாட்டின் அரசமைப்பையும் விமர்சிக்க முடியாது. ஆக மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தவறு – சட்டவிரோதமாகும். எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவை. வடக்கில் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இது தெரியும்.
இறுதிப்போரின்போது மக்கள்மீது புலிகளே தாக்குதல் நடத்தினர். படையினரிடம் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு சரணடைய வந்த ஒருவரே பிரபாகரனின் இருப்பிடத்தை காண்பித்தார். எனவே, எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியானவையாகும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அதற்கு அஞ்சமாட்டோம். நிராகரிப்போம்.” – என்றார்.