ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தமக்கு ஆதரவளிக்குமாறு இந்தியாவிடம், இலங்கை எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தாலும் தனது நிலைப்பாட்டை புதுடில்லி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமானது. எனினும், மாநாட்டில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இலங்கை முன்கூட்டியே இறங்கியது.
இதன்ஓரங்கமாக இந்தியாவின் ஆதரவைக்கோரி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு டில்லியிடமிருந்து கொழும்புக்கு இன்னும் உரிய பதில் வழங்கப்படவில்லை என இராஜதந்திர மட்டங்களில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இந்தியா ஆதரவளிக்ககூடும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு சார்பாக செயற்படுவதற்கு சீனா முடிவெடுத்துள்ளதால் இந்தியா நேரடியாக எதிர்ப்பு வெளியிடாவிட்டாலும் நடுநிலை வகிக்கக்கூடும் என ஒரு தரப்பினரும், பிராந்திய பலனை நிலைநிறுத்துவதற்கு கொழும்புக்கு நேசக்கரம் நீட்டக்கூடும் என மற்றுமொரு தரப்பினரும் கருத்து வெளியிடுகின்றனர்.