தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தது. தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
அவரை சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் வியூகம், பிரச்சார அம்சங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
