தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று விரைவில் நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப்பெறுவதற்கு தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அத்துடன் ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் முற்போக்கு கூட்டணி இது விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்’ அமைப்பதற்கு முன்வரவேண்டும் என்ற அழைப்பை எட்டாவது பாராளுமன்றத்திலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது. இதன்போது இவ்விவகாரம் பற்றியும் பரீசிலிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.