வடக்கு , கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புகளின் ஒருமித்த நிலைப்பாட்டை – பொதுவான அபிலாஷைகளை – பிரதிபலிக்கும் பொது ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் புதிய நகலொன்று இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரீசிலனைக்கு வழங்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில்இன்று நண்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவர புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியில் எம்.ஏ, சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேந்திரன் குருசாமி ஆகியோர பங்குபற்றினர். புதிய ஆவண நகல் தொடர்பில் மனோ கணேசன் அனுப்பி வைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த ஆவணத்தில்
13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முல் இலங்கை, இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.
13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டு, பின் கைவாங்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய, இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் மூன்று பக்கங்களைக்கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிநதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து இறுதி செய்யப்படும்.
