தலைமைப் பிக்குவை கொன்றுவிட்டு டுபாய் தப்பியோட முற்பட்ட இளம் பிக்கு கைது!

சீதுவ பகுதியிலுள்ள விகாரையொன்றின் தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த 18 வயதான தேரர் ஒருவரே கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சீதுவ – வேத்தேவே பகுதியிலுள்ள விகாரையொன்றின் தலைமை தேரரின் சடலம், குறித்த தேரர் தங்கியிருந்த அறையிலிருந்து நேற்று(14) மாலை மீட்கப்பட்டது.

குறித்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தேரரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த தேரரின் கண்கள் கட்டப்பட்டு, வாய் துணியால் அடைக்கப்பட்டவாறு துணியால் போர்த்தப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதான தேரர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விகாரையிலிருந்த ஜீப் மற்றும் காரொன்றும் காணாமல் போயுள்ளது. இரண்டு வாகனங்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles