தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து ஐந்தாக அதிகரிக்குமாறு, ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளையும், அவதானிப்புகளையும் முன்வைப்பதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழுவை பிரதமர் நியமித்திருந்தார்.
அக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் (15) பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இவ்வறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
அத்துடன், தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 19 இன் பிரகாரம் தக்கவைத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரட்டை குடியுரிமை கொண்டிருக்ககூடாது எனவும், நாடாளுமன்றத் தெர்தலில் போட்டியிடுபவருக்கு அது பொருந்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அவசர சட்டமூலம் முன்வைப்பதற்கான வாய்ப்பை நீக்குமாறும், சட்டமூலமொன்றை முன்வைத்தால் அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு மக்களுக்கு 14 நாட்கள் அவகாசம்வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.