கொட்டகலை பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான COVid 19 1ஆவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக வட்டகொட , போகாவத்த, தெவிசிரிபுறம், கிரேட் வெஸ்டன் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு இன்றுவரை முதலாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களிடம் வினவியபோது தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து அமைய நாட்டிலுள 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் இரண்டாவது தடுப்பூசியும் முழுமையாக வழங்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் சில கிராம சேவகர் பிரிவுகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடம் வினவியபோது இன்னும் ஒருசில தினங்களில் தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு கிடைக்கப் பெறும் பட்சத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ஆன முதலாவது கட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி முடிக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.
ஆகவே நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான அரசாங்க அதிபர் சுகாதார பணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
செப்டம்பர் 15ஆம் திகதி முதல் பொது போக்குவரத்தில் ஈடுபடும் சகலரும் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான அட்டைகளை கைவசம் வைத்திருக்கவேண்டும் என சுகாதார அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கெளசல்யா S










