” நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் பேச்சுகூட நடத்தப்படவல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்துவருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேற்கோள்காட்டி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.
” உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமற்ற ரீதியிலோ இது பற்றி பேச்சு நடத்தப்படவில்லை. இந்நாட்டில் இரு தடவைகள்தான் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 1975 இல் ஈராண்டுகள் நீடிக்கப்பட்டன. 1977 இல் ஆட்சிக்கு வந்த அரசு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நீடித்துக்கொண்டது.
இவ்விரு சந்தர்ப்பங்களிலுமே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாட்டு மக்களுக்கு தெரியும். பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இவ்வாறான நகர்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்புடைய விடயங்கள் அல்ல. எனவே, இந்த அரசிடம் அவ்வாறான திட்டம் இல்லை.” – என்றும் அமைச்சர் டளஸ் குறிப்பிட்டார்.










