நுவரெலியாவில் 8 கிராமங்களுக்கு 8 நாட்களாக மின்சாரம் இல்லை! தூங்குகிறதா மின்சார சபை?

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்கு உட்பட்ட தெரிப்பெய பொலிஸ் பிரிவு மற்றும் உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவு ஆகிய எட்டு கிராமங்களுக்கு கடந்த (08.12.2022) காலை முதல் இதுவரை மின்சாரம் இல்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி வீசிய மினி சூறாவளியினால் தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெதிலந்த,பாலகம, உடகம,திக்கல மற்றும் பஸ்பனாவெல ஆகிய கிராமங்களில் பாரிய மரங்கள் மின்கம்பங்கள் மீது முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அதேபோல உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரதேசத்தில் மீப்பனாவ,எம்புலம்பா மற்றும் நுககொட ஆகிய கிராம பகுதிகளிலும் மின்சார கம்பங்களில் மரங்கள் வீழ்ந்து மின் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக மின்சார கம்பங்கள் சீர்செய்து வழமையான மின்சாரம் வழங்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் இக்கிராமிய பகுதிகளுக்கு மின் தடை தொடர்ச்சியாக இருக்கின்ற நிலையில் ஐந்தாம் தரம் புலமை பரிசில் பரீடசைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது நிலையில் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேபோல இக் கிராமங்களில் மினி சூறாவளிக்கு தமது வீடுகளை இழந்து தற்காலிக பொது தங்குமிடங்களில் சிறு குழந்தைகளுடன் வசிக்கும் மக்களும் மின்சாரம் இன்றி பாரிய அசௌகரிகங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பிரதேச மக்கள் இது தொடர்பில் கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்துக்கு தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளனர். இவ்வாறு முறையிட்டுள்ளதால் தலைமையக ஊழியர்களை வரவழைத்து பிரதேசத்திற்கான மின்சார சீர்த்திருத்த பணிகளை செய்ய சொல்லுங்கள் என வலப்பனை பிரதேச மின்சார சபை ஊழியர்கள் மக்களிடம் தெரிவித்துள்ளதால் ஆத்திரம் அடைந்துள்ள பிரதேச மக்கள் வீதிக்கு இறங்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles