” நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில், நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நுவரெலியா கல்வி காரியாலயம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தி கோட்லோஜ் தோட்ட பெற்றோர், நுவரெலியா கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும், தமது கோரிக்கை தொடர்பாகவும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் 11 வரையான வகுப்புகளில் 300-இற்கு அதிகமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் வருகின்றனர்.
இருப்பினும் கடந்த இரண்டு வருட காலமாக இம்மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத நிலையில் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக நுவரெலியா வலய கல்வி பணிமனைக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்குமாறு பலமுறை முறைப்பாடுகள் தெரிவித்த போதும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், இந்த அமைதிவழி போராட்டத்தை தாம் மேற்கொண்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆ.ரமேஷ்