தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7, பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வியாபாரத்திற்காக ஒருவரிடமிருந்து பணக் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசித் தீர்த்துக் கொள்வதற்காக அண்மையில் காசல்ரீ என்ற இடத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, எதிர்தரப்பின் வாகன சாரதியொருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை மையமாக வைத்தே பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் ரெிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது கத்தியுடன் வந்ததாகவும், சிவநேசன் தரப்பினர் கற்களைக் கொண்டு தாக்கியதாகவும் குறித்த சாரதி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தற்கு முன்னதாக சிவநேசனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை எனவும், காயமடைந்த நபர் குடிபோதையில் விழுந்தே காயமடைந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், சிவநேசன் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலகிருஸ்ணன் சிவநேசன் தேசிய தொழிலாளர் சங்கத்தின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய தொழிலாளர் சங்கத்தின் பிரதான வேட்பாளர்களான திகாம்பரம், உதயா, இராதாகிருஸ்ணன் ஆகியோரை ஆதரித்து அண்மையில் இளைஞர்கள் கூட்டமொன்றையும் அட்டனில் சிவநேசன் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றிருந்தார்,