அமெரிக்காவின் ‘மெம்பிஸ் கிரிஸ்லீஸ்’ (Memphis Grizzlies) கூடைப்பந்து அணியின் வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke), ஹெரோயின் (Heroin) மற்றும் கொக்கைன் (Cocaine) ஆகிய போதைப் பொருள்களை உட்கொண்டதன் விளைவாகவே கடந்த மே மாதம் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான இந்த கூடைப்பந்து விளையாட்டு வீரரின் மரணம் எதிர்பாராமல் நடந்த விபத்து (Accidental) என்று லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி மருத்துவப் பரிசோதகர் துறை (Los Angeles County Department of Medical Examiner) உறுதி செய்துள்ளது.
கடந்த மே 11 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள ஒரு வீட்டில் கிளார்க் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
கிளார்க்கின் மறைவை மெம்பிஸ் கிரிஸ்லீஸ் அணி நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்த இடத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணை விவகாரங்களை அறிந்த நபர் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பொதுவெளியில் இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால், அந்த நபர் தனது பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் இத்தகவலைப் பகிர்ந்திருந்தார்.
பிராண்டன் கிளார்க், 2026-27 பருவம் (Season) வரை மெம்பிஸ் கிரிஸ்லீஸ் அணியுடன் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் உயிரிழப்பதற்கு சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆர்கன்சாஸில் (Arkansas) கைது செய்யப்பட்டார்.
‘கொன்சாகா’ (Gonzaga) கல்லூரியில் தனது கல்வி மற்றும் கூடைப்பந்து பயணத்தை முடித்த பிறகு, தனது 7 ஆண்டுகால தொழில்முறை கூடைப்பந்து வாழ்க்கைய முழுமையாக ‘மெம்பிஸ்’ அணியுடனேயே அவர் கழித்துள்ளார்.










