இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற நைஜர் நாட்டின் மீது வெகு விரைவில் இராணுவ தலையீடு ஒன்றை மேற்கொள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளிடையே இணக்கம் எட்டப்பட்டதாக ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிராந்திய தலைவர்களின் கூட்டத்தில் தயார்நிலை இராணுவப் படை ஒன்றை கூட்டுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. படைகளை பயன்படுத்துவது கடைசி தீர்வாக இருக்கும் என்று நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு தெரிவித்துள்ளார்.
நைஜரில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி இராணுவம் ஆட்சியை பிடித்தது.
இதனையடுத்து பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் பசூம் இரண்டு வாரங்களுக்கு மேல் வீட்டுக் காவலில் இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை பற்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டத்திற்கு பின்னர் பேசிய ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி அலசன் அவுடாரா கூறியதாவது, அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு அந்த ஆபிரிக்க நாட்டின் மீது இராணுவ தலையீடு மேற்கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐவரிகோஸ்ட் 850 தொடக்கம் 1,100 படையினரை வழங்கும் என்றும் நைஜர் மற்றும் பெனின் நாட்டு படையினரும் நிலைநிறுத்தப்படவுள்ளனர் என்றும் அவுடாரா கூறினார்.
எந்த ஒரு இராணுவ தலையீட்டுக்கும் எதிராக செயற்படப்போவதாக நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நைஜரில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவர பிராந்திய நாடுகள் கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை கெடு விதித்தபோதும் அது நிறைவேற்றப்படவில்லை.