பசறையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை நிலையத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் உரை நிகழ்வும் பசறை நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திட்ட முகாமையாளர் , நிலைய பணியாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் , பசறை பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பசறை நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியின் மூலம், சிறுவர் துஷ்பிரயோகம்,சிறுவர்கள் புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய செய்திகள் முன்வைக்கப்பட்டன.

பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு உரையில், சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, சிறுவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துக்களை அடையாளம் காணுதல், பெற்றோரின் பொறுப்பு மற்றும் சமூகத்தின் பங்கு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பசறை பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள், சிறுவர்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை வலியுறுத்தினர்.

மேலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் திறந்த மனதுடன் உரையாடுவதுடன், ஏதேனும் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் போது உரிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் மூலம், ஒவ்வொரு சிறுவரும் பாதுகாப்பான, அன்பான மற்றும் ஆதரவான சூழலில் வளர்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர் என்ற முக்கியமான செய்தி சமூகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை, பெற்றோர்கள், அரச நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் சமூகத்தின் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து, சிறுவர் பாதுகாப்பையும் சிறுவர்களின் நலனையும் மேலும் வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி -ஊவா சுரேன்

Related Articles

Latest Articles