பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு எரிபொருட்களின் விலை குறைப்பு என்ற நாடகம்கூட அரங்கேற்றப்படலாம் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான பந்துல லால் பண்டாரிகொட கூறியவை வருமாறு,
” அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. எனவே, அனுதாபம், கவலை தெரிவிக்காமல் எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ராஜபக்சக்கலால் ஒரு மேசையில் தேநீர் குடிக்கும்போதுகூட இப்பிரச்சினையை தீர்க்க முடியும். நிலைமை இவ்வாறிருக்கையில் பந்து அங்கும், இங்குமாறு பறிமாற்றப்படுகின்றது.
தற்போதைய அரசியல் சர்வபலம் படைத்த நபரா பஸில் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும், பஸில் ராஜபக்ச நாடு திரும்பியகையோடு புதிய நாடகமொன்றுகூட அரங்கேறலாம். அவர் வந்த பின்னர் எரிபொருட்களின் விலைகூட குறைக்கப்படலாம்.” – என்றார்.
அதேவேளை, அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
