பஸ்ஸை பிடிக்க ஆட்டோவை கடத்திய மாணவர்கள் – பதுளையில் சம்பவம்!

இ.போ.ச. பஸ் சென்றுவிட்டதினால், மாணவர்கள் இருவர், அப்பஸ்சைப் பிடிக்க வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைக் கடத்திச்சென்றபோது, அவ் ஆட்டோ விபத்துக்குள்ளாகியதில், அவ்விருமாணவர்களும் படு காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து ஹப்புத்தளை பகுதியின் மேல் விகாரகலை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்றுவந்த இம்மாணவர்கள் விபத்தில் கடுங்காயங்களுக்குள்ளானதினால், ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, ஆரம்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து, அவ்விருவரும் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விருமாணவர்களும் பாடசாலைவிட்டு, வீடுசெல்ல இ.போ.ச. பஸ் தரிப்பிடத்திற்கு சென்றனர். பஸ்சென்றுவிட்டதை அறிந்த இம்மாணவர்கள் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைக் கடத்திக்கொண்டு, குறிப்பிட்ட பஸ்சைப்பிடிக்கச்சென்றனர். ஆனால், கடத்திச்சென்ற ஆட்டோ, பாதையை விட்டு விலகி, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles