” பஸ் கட்டணத்தை அதிகரித்து, பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க அரசு தயாராக இல்லை என்றும் போக்குவரத்துத் துறையில் காணப்படும் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், போக்குவரத்துச் சேவையில் தற்போது காணப்படும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமென்றும், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.டீ.எல்.கே. டீ அல்விஸ், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டீ.ஜயசுந்தர ஆகியோர் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.










