ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்களை பாதுகாப்பு நிறுவனங்கள் இன்று வெளியிட்டன. ஆசிப் ஃபௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய மூன்று பேரும் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர்கள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற குறியீட்டுப் பெயர்களைக் கொண்டிருந்ததாகவும், பூஞ்ச் பயங்கரவாத சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஓவியங்கள் உயிர் பிழைத்தவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் இணைகிறது என்ஐஏ: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு முகமை (NIA) குழு, தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்துள்ளது. துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தலைமையிலான NIA குழு, சம்பவம் நிகழ்ந்த இடத்தை முழுமையாக மதிப்பீடு செய்தது. இதன்மூலம், தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, படுகொலைக்கு காரணமானவர்களை அடையாளம் காண காவல்துறைக்கு என்ஐஏ உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் மனைவி முன் கொல்லப்பட்ட கணவர்: கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதி, இரண்டு மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 12 அன்று திருமணம் செய்து கொண்டார். சிமென்ட் வியாபாரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த சுபம், ஏப்ரல் 16 அன்று தனது மனைவி மற்றும் ஒன்பது குடும்ப உறுப்பினர்களுடன் காஷ்மீருக்குச் சென்றிருந்தார்.
“பயங்கரவாதிகள் முதலில் சுபமிடம் ‘கல்மா’ (இஸ்லாமிய நம்பிக்கை பிரகடனம்) சொல்லச் சொன்னார்கள். அவர் அவ்வாறு செய்யத் தவறியதால், அவர்கள் அவரது தலையில் சுட்டனர். சுபமைக் கொன்ற பிறகு, பயங்கரவாதிகளில் ஒருவர், சுபமின் மனைவியிடம் திரும்பி, ‘உங்கள் கணவருக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று உங்கள் அரசாங்கத்திடம் சொல்லுங்கள்’ என்று கூறினார்” என்று சுபமின் உறவினர் சௌரப் திவேதி தெரிவித்துள்ளார்.