ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக் கிண்ணத்தை சாம்பியனான இந்திய அணி வாங்க மறுத்தது,
இதனையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் கால தாமதமானது.
இந்திய அணிக்குச் சேர வேண்டிய கிண்ணத்தையும், பதக்கங்களையும் மோசின் நக்வி எடுத்துச் சென்றது கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மோசின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் என்பதோடு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,
“மோசின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற மாட்டோம் என்று முடிவெடுத்தோம். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். அதனால் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தோம், இதனால் அந்தக் கோப்பையை அவர் எடுத்துக் கொள்ளட்டும் என்று அர்த்தமல்ல. அதனால் கோப்பையும் பதக்கங்களையும் அவர் எடுத்துச் செல்ல முடியாது. விரைவில் அது இந்திய அணியிடம் சேர்ப்பிக்கப்படும் என்று நம்புகிறோம்.
வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் நாங்கள் பாகிஸ்தானின் மோசின் நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம்.” என்று விவரித்தார்.
பரிசளிப்பு நிகழ்ச்சித் தொடங்கிய பிறகு குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மேடையில் இருந்த மற்ற விஐபிக்களிடமிருந்து பதக்கங்களைப் பெற்றனர்.
பாகிஸ்தான் தலைவர் சல்மான் ஆகா, நக்வியிடமிருந்து ரன்னர்களுக்குரிய காசோலையைப் பெற்றார்.
அப்போது இந்திய அணிக்குக் கோப்பை என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்தது. உடனே பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி ஊடகத்தின் சைமன் டூல் , ‘இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை’ என்று அறிவித்ததோடு, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது என்றார்.
ஆட்டம் முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நான் கிரிக்கெட் ஆடும் காலத்திலிருந்து இப்படி ஒன்று நடத்தையைப் பார்த்ததில்லை. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை. நாங்கள்தான் கோப்பையை பெற முழுத் தகுதி பெற்றவர்கள். இதை விட வேறு எதையும் என்னால் கூற முடியவில்லை. ” – என்று குறிப்பிட்டார்.










