பாடசாலையில் களவாடிய பழைய மாணவர் கைது!

ஹல்துமுல்ல சொரகுனே பகுதியிலுள்ள பாடசாலையொன்றுக்குள் புகுந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாயொருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் எனவும், புனானி இராணுவ முகாமில் சேவையாற்றும், பொறியியலாளர் படைப்பிரிவின் சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் சங்கீத வகுப்பறையை உடைத்து மல்டி மீடியா , புளூடூத் , சீடி பிளேயர் உள்ளிட்ட உபகரணங்களையே களவாடியுள்ளார்.

திருடப்பட்ட மல்டிமீடியாவை 25 ஆயிரம் ரூபாவிற்கு தியத்தலாவ பிரதேசத்திற்கு விற்று சந்தேக நபர் பணம் பெற்றுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபானவின் ஆலோசனையின் பேரில், ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீர உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles