விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம் என்று ஜே.வி.பியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.
88 – 89 காலப்பகுதியில் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கினர் என இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம். இதற்கு பதிலளித்தும் பயன் இல்லை.
தேசிய மக்கள் சக்தியுடன் முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இணைந்துவருகின்றனர்.
அதேபோல ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களும் இணைந்து செயற்படுகின்றனர். இவ்வாறு நாட்டை பாதுகாத்த படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் நாம் பயணிக்கின்றோம்.
ஆனால் கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரை இணைத்துக்கொண்டு ரணில் செயற்படுகின்றார். அவரின் ஆலோசனையின் பிரகாரம்தான் பிள்ளையான் அந்த கதையைக் கூறி இருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுக்கு எதிராகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
பிள்ளையான், கருணா அம்மான் போன்றோரை இணைத்துக்கொண்டு ரணிலால் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நிறுத்த முடியாது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கப்பல் பெறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பிலும் எமது ஆட்சியில் சட்டம் உரிய வகையில் செயற்படும்.” என்றார்.