புதிய வகை கொரோனாவால் நாடு மீண்டும் முடக்கப்படுமா? நாளை இறுதி முடிவு!

உருமாறிய புதிய கொரோனா வைரஸின் அதிதீவிர பரவலுக்கு மத்தியில் நாடு தழுவிய முடக்க நிலையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்ற போதிலும் நாளையதினம் கொரோனா தடுப்பு பற்றிய தேசிய செயற்பாட்டு நிலையம் சந்திக்கும் போது இது குறித்து ஆராயப்படும் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘நாடுதழுவிய முடக்கநிலையைக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் நாளையதினம் கூடும் போது இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும்’என பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு தற்போதைய நிலைமையை ஆராய்ந்துவருவதாவும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கும் எனவும் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி கணக்கெடுப்பில் இலங்கையில் 33,472 கொரோனா தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டிருந்தனர். அது முதல் இன்றையதினம் பெப்ரவரி 14ம் வரையான இரண்டுமாத காலப்பகுதியில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தால் அதிகரித்து இதுவரை இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74, 852 ஆக அதிகரித்திருக்கின்றது.

இலங்கையில் ஒருபகுதி பாடசாலைகளை நாளை பெப்ரவரி 15ம் திகதிமுதல் மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தபோதும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிவருவதன் காரணமாக அந்த தீர்மானம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் Covid-19 வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles