‘புர்கா தடை குறித்து அவசரமாக முடிவெடுக்க முடியாது – ஆழமாக ஆராய வேண்டும்’

புர்கா மற்றும் நிக்காப் தொடர்பிலான தடையை நடைமுறைப்படுத்துவது ஆலோசனை மற்றும் பொதுவான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் திடீர் முடிவுகள் எதையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் புர்கா மற்றும் நிக்காப் தடை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் கலாச்சார ரீதியிலான விடயங்களுடன் இது சம்பந்தப்பட்டது.

இந்த மக்கள் இலங்கையர் என்ற ரீதியில் இங்கு வாழ்கின்றனர். அவர்களது கலாச்சார உரிமையை பாதுகாக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. இதனடிப்படையில் புர்கா, நிக்காப் போன்றவற்றின் தடை வதிப்பு அவர்களது கலாச்சாரத்தில் தேவையற்ற அழுத்தத்தை மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஆடை மூலம் அச்சுறுத்தல்கள்; ஏற்படுமாயின் அது தொடர்பில் அவசியம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இந்த விடயம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாகும் இருப்பினும் சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இந்த தடை விதிப்பு தொடர்பில் எந்தவொரு நாடும் அழுத்தத்தை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles