கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்குற்ற சந்தேக நபர்கள் இருவருக்கு ‘சயனைட்’ கலந்த பாலே வழங்கப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பாலை வழங்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
கொழும்பு, ஜிந்துபிட்டிய பகுதியில் ஜனவரி 24 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டனர். இதன்போது ஒருவர் பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த நபர்களை நேற்று முன்தினம் பகல் நபரொருவர் பார்வையிட வந்துள்ளார். இருவருக்கும் பால் பக்கட்டுகளை வழங்கியுள்ளார். பனிசும் வழங்கப்பட்டுள்ளது. பாலை அருந்திய பின்னர் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
அதன்பின்னர் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்கக்ப்பட்டனர். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் ‘குடு செல்வி’ யின் தரப்பை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய தரப்பு பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் சகாக்களாவர்.
இந்நிலையிலேயே இதற்கு பழிதீர்க்கும் வகையில் பொலிஸில் இருந்த பூகுடு கண்ணாவின் சகாக்களுக்கு, குடு செல்வி தரப்பு இவ்வாறு விஷம் கலந்த பாலை வழங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
விஷம் கலந்த பாலை கொண்டு சென்றவர் பூகுடு கண்ணாவின் குழுவை சேர்ந்தவர் எனவும், அவரை குடு செல்வி தரப்பு விலைக்கு வாங்கியே இந்த செயலை செய்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.