பூண்டுலோயா கும்பாபிஷேக திருவிழாவில் நகைகளை கொள்ளையிட்ட 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது !

பூண்டுலோயா அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவின்போது, பக்தர்களின் நகைகளைத் கொள்ளையிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 7 பெண்கள் உட்பட 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்லேகல , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்ற ஒன்பதிற்கும் மேற்பட்ட அடியவர்களின் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதை தொடர்ந்து நகைகளைப் பறிகொடுத்தவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமி ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அச்சுறுத்தி அபகரிக்க முற்பட்ட போது அவர்களின் இருவர் பொது மக்களும் , பொலிஸாரும் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களில் ஏழு பேர் தப்பிச்செல்ல முற்பட்ட போது கொத்மலை பொலிஸாரின் உதவியுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேனில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டனர் . இவர்களிடம் பூண்டுலோயா ஆலயத்தில் அபகரிக்கப்பட்ட 17 பவுண் 3 மஞ்சரி நகையும் , இவர்கள் அனைவரிடமும் சோதனை செய்த போது 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று பூண்டுலோயா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார விஜேசுந்தர தெரிவித்தார்.

மேற்படி சந்தேகத்தில் கைது செய்த ஒன்பது பேரையும் சனிக்கிழமை நாவலபிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்கள் ஒன்பது பேரையும் தடுத்து வைத்து திருட்டை நேரில் பார்த்தவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் , இவர்கள் தொடர்பில் பல இடங்களில் வழக்குகள் காணப்படுவதாகவும் , பூண்டுலோயா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி சுகத் பண்டார விஜேசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles