பெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைகளில் இதனுடன் தொடர்புடைய பலர் தொடர்பில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய தபால் திணைக்களம் , தபால் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்பன அவ்வாறு தெரியவந்தவையாகும்.
இதன் போது தமிழ் மொழி பேசக் கூடிய கடிதங்களை விநியோகிக்கக் கூடியவர்களின் பற்றாக்குறை, பெருந்தோட்டங்களில் காணப்பட்ட உப தபாலகங்கள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பெருந்தோட்டங்களிலுள்ள வீடுகளை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்கான இலக்கங்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் இதனுடன் தொடர்புடையவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
