இலங்கை நிதி அமைச்சர் மேன்மைதங்கிய திரு. பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய திரு. கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில், பெற்றோலியப் பொருட்கள் கொள்வனவுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உடன்படிக்கை ஒன்றில், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் (எக்ஸிம் வங்கி) இலங்கை அரசாங்கமும் 2022 பெப்ரவரி 02ஆம் திகதி அன்று கைச்சாத்திட்டுள்ளன.
2. இலங்கை திறைசேரி செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் இலங்கை சார்பாகவும், எக்ஸிம் வங்கியின் பிரதம பொது முகாமையாளர் திரு கௌரவ் பண்டாரி அவர்கள் இந்தியா சார்பாகவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
3.இலங்கையால் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் அவர்களுக்கும் நிதி அமைச்சர் மேன்மைதங்கிய திரு.பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் 2022 ஜனவரி 15ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் மார்க்கமூடான கலந்துரையாடலின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில இந்த முக்கிய ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
4. கொவிட்-19க்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளில் இலங்கையின் மிகவும் நெருக்கமான பங்காளியாகவும் அதேநேரம் நீண்டகால உறவைக்கொண்டிருக்கும் பங்காளியாகவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் கடனுதவி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை நமது இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமனாதொரு விடயமாக காணப்படுவதுடன் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச்செலாவணி ஆதரவு இந்தியாவால் வழங்கப்பட்டமையின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
2021 டிசம்பரில் கௌரவ நிதி அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களிற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதரவுடன் இலங்கைக்கான ஒட்டுமொத்த இந்திய அபிவிருத்தி உதவித்திட்டங்கள் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.