பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 15 நாட்களில் அதிகளவான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ் நிலையில் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், என்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படும் நிலையில், சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில்  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 113 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 65 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles