போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை வந்த எழுவர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!

சிவனொளிபாதமலை யாத்திரை கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், சிவனொளிபாத மலை புதின பூமிக்கு போதைப்பொருட்கள் கொண்டுசெல்வதை தடுப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘ஹோன்’ என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதற்கமைய நேற்று (30) ஆம் திகதி குறித்த நாயின் உதவியுடன் நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியகலை பகுதியில் சிவனொளிபாதமலை நோக்கி வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது மதனமோதகம் என்ற போதை பொருள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கடந்த இரண்டு மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா , சட்டவிரோத சிகரட்டுக்கள், போதை மாத்திரைகள் போன்ற போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதற்கு முற்பட்ட 07 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஹட்டன் நீதி மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கிரிந்திவெல, கொழும்பு, குருணாகல் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சோதனை நடவடிக்கை சிவனொளிபாதமலை பருவகாலம் முடியும் வரை இடையிடையே மேற்கொள்ளப்படவுள்ளது.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles