மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை – மயந்த திஸாநாயக்க

” மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை. மனசாட்சியின் பிரகாரம் செயற்படுபவன் நான். எனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எனினும், அரச தரப்பின் ஆதரவுடன் அப்பதவிக்கு மயந்த திஸாநாயக்க தெரிவாகியிருந்தார்.

இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. மயந்த திஸாநாயக்க பதவி விலக வேண்டும் எனவும் வலிறுத்தின. இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்திருந்தாலும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பதவி விலகும் முடிவை அறிவிப்பை நேற்று விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் முடிவை நான் எடுத்திருந்தேன். அந்த முடிவு சரி. மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை. மக்கள் பக்கம் நின்று கொள்கை அரசியலை நடத்துபவன் நான்.

அனைவரும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து பதவியை வழங்கினால் அதனை ஏற்க தயாரா என்றுதான் என்னிடம் வினவப்பட்டது. அதற்கு உடன்பட்டேன். எனினும், அவ்வாறு இணக்கப்பாடு இல்லை. எனவே, பொது இணக்கப்பாட்டை கருதி பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். இது பற்றி சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles