‘மதுஷ் வெளிப்படுத்திய தகவல்களை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது’

” மாகந்துரே மதுஷ் மரணித்துவிட்டார் என்பதற்காக விசாரணைகள் நிறுத்தப்படாது, அவை தொடர்ந்தும் இடம்பெறும். அதேபோல் அவர் வெளிப்படுத்திய எல்லா பதிவுகளும் பொலிஸ் புத்தகத்தில் உள்ளன. எனவே, எதனையும் மூடிமறைக்கமுடியாது.”  – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (21) தெரிவித்தார்.

மாகந்துரே மதுஷ் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிப்படுத்திய அனைத்து தகவல்களும் மூடிமறைக்கப்படும், அதேபோல் அவருடன் தொடர்பு வைத்திருந்த 80 அரசியல்வாதிகளும் தப்பிவிடுவார்கள் என்று எதிரணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு,

” ஏதேனும் ஒரு விசாரணை  நடைபெறும்போது அது தொடர்பான தகவல்கள், தரவுகள் முன்னர் பொலிஸ் புத்தகத்தில் மாத்திரமே பதிவுசெய்யப்படும், ஆனால் தற்போது ஒலி மற்றும் ஒளிப்பதிவும் செய்யப்படும் நடைமுறையும் இருக்கின்றது. மாகந்துரே மதுஷிடம் பல மாதங்கள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன். அவை தொடர்பான தகவல்கள் பொலிஸ் புத்தகத்திலும், குற்றப்புலனாய்வுப் பிரிவின்  ‘பேட்’டிலும் விசேட இலக்கத்துடன் உள்ளன.

பொலிஸ் புத்தகத்தில் தகவல்களை பதிவிட்டுவிட்டு அவற்றை அவ்வாறே வைத்திருக்கமுடியாது, தாமதமின்றி அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். தேவையேற்படின் அந்த புத்தகங்களை கொண்டுவந்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கின்றது.சிலசமயங்களில் அதன் பிரிதிகளைக்கூட மாற்று தரப்புகளுக்கு வழங்கலாம்.

எனவே, பொலிஸ் புத்தகத்தில் பதிவான தகவல்களை ஒருபோதும் மறைக்க முடியாது, அவை நிச்சயம் வெளிச்சத்துக்குவரும். நீங்கள்கூறுவதுபோல யாராவது குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தால் நிச்சயம், விசாரணைகள் இடம்பெறும். கடந்தகாலங்களில் அவ்வாறான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, வெளிப்படுத்திய தகவல்களை எவராலும் மறைக்கமுடியாது, நீதிமன்றத்தின் முன்னிலையில்தான் அவை முடிவுக்குவரும்.

தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.
அதேவேளை, போதைப்பொருள் விவகாரம், நிதிமோடி, கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை மதுஷ் வெளியிட்டிருந்தால் நிச்சயம் விசாரணை நடைபெறும், ஒருவர் மரணித்துவிட்டார் என்பதற்காக அதனுடன் தொடர்புட்ட ஏனைய சந்தேக நபர்கள் விடுபடமுடியாது, அதற்கு சட்டத்திலும் இடமில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles