தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த 25 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண், கொலை செய்யப்பட்ட பின்னரே நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்தரவள்ளி (வயது – 28) என்ற குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.
சடலம் மீட்கப்பட்டதையடுத்து அது தொடர்பில் தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கைரேகை அடையாளப்பரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டுக்கு செல்லும் போது , குறித்த பப்ணின் கணவர் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது, கூலி வாகன சாரதியாக வேலை செய்யும் குறித்த நபர், தனது மனைவிக்கும் மற்றுமொருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதனால் கடந்த 23 ஆம் திகதி சண்டை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே மனைவி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, கணவன் வேலைக்கு சென்றுள்ளார். இரவு வீடு வந்து 11 மணியளவிலேயே சடலத்தை நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளார்.
ஹட்டன் விசேட நிருபர் – கே.சுந்தரலிங்கம்