மன்னாரில் மாயமான மர்ம நபர்: புறமுதுகில் பொதியுடன் தேவாயலத்திற்கு வந்ததால் சர்ச்சை : மன்னாரில் தேடுதல்

மன்னாரில் பேசாலை பகுதியில் பொதியொன்றுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் மாயமானதால் அந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வெற்றிநாயகி தேவாலயத்திற்கு நபர் ஒருவர் சனிக்கிழமை மாலை வந்துள்ளார். இவர் பின்முதுகில் பையுடன் காணப்பட்டுள்ளார். இவரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எனினும், அதற்கு மழுப்பலாக பதில் கூறிய நிலையில், இந்த நபர் குறித்து அருட்தந்தைக்கு அங்கிருந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே குறித்த நபர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அருட்தந்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார். பொலிசார் குறித்த பிரதேசத்தில் விசாரித்தும், தேடுதல் நடத்தியும் வருகின்றனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், குறித்த நபர் எங்கு மாயமானார் என்பது குறித்து உரிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என மன்னார் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் பேசாலை பிரதேசத்திற்கு வந்து, பங்குத்தந்தையுடன் விடயங்களை ஆராய்ந்து சென்றுள்ளனர்.

அத்துடன். குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  • ஹஸ்மத்

 

Related Articles

Latest Articles