மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களை பதிவுசெய்வது இடைநிறுத்தம் – மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து வரும் இந்து ஆலயங்களை பதிவு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ் ஆலயங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஆலயம் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தினை மீளவும் நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்வதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அக்கடிதத்தில், ‘ கணிசமான இந்து ஆலயங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால், அரசினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அவ் ஆலய அபிவிருத்திக்கு நிதியினை ஒதுக்க முடியாமல் இருந்து வருகின்றது. இது குறித்து பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். ஆகவே ஆலயப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால், அவ் ஆலயங்களை அபிவிருத்தி செய்ய முடியாமல் உள்ளன.

இதனால் ஆலய பரிபாலன சபையினர் பலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஆலய பதிவுகளை மீளவும் நடைமுறைப்படுப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles