மலையகத்தில் தொடர் மழை! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நுவரெலியா, கந்தப்பொல, தலவாக்கலை, நானுஓயா, கொட்டக்கலை, அட்டன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயா பெருக்கெடுத்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு சனிக்கிழமை காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளன. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் மேலும் ஒரு வான் கதவு திறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரேந்தும் பகுதிகளை அண்மித்து காணப்படும் குடியிருப்பாளர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் வாகன சாரதிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா நகரை அண்மித்த பகுதி, நானுஓயா பங்களாவத்தை பகுதி மற்றும் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் 20.9.2020 அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. இதனால் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளில் அப்பிரதேச மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் மின் இணைப்புகள் மீதும் குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. இம்மழை காரணமாக தலவாக்கலை நகர் புறங்களில் மக்கள் நடமாட்டம் பெரிதும் குறைவடைந்துள்ளதையும் காணமுடிகிறது. தலவாக்கலை மேல்கொத்மலை திட்டத்தை அண்டிய பகுதிகளில் கடுங்குளிர் காலநிலை காணப்படுவதால் இப்பிரதேச மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். இம்மழையுடன் மாலை பனி மூட்டமும் காணப்படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் அவதானமாக செலுத்த வேண்டும்.
குறிப்பாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி மற்றும் பங்களாவத்தை பகுதியில் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதால் அப்பாதை வழியாக பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயமும் ஆங்காங்கே நிலவுவதால் மக்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles