மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நுவரெலியா, கந்தப்பொல, தலவாக்கலை, நானுஓயா, கொட்டக்கலை, அட்டன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கொத்மலை ஓயா பெருக்கெடுத்துள்ளதுடன் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு சனிக்கிழமை காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளன. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் மேலும் ஒரு வான் கதவு திறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரேந்தும் பகுதிகளை அண்மித்து காணப்படும் குடியிருப்பாளர்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் வாகன சாரதிகள் முன்விளக்குகளை ஒளிரவிட்டு அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா நகரை அண்மித்த பகுதி, நானுஓயா பங்களாவத்தை பகுதி மற்றும் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் 20.9.2020 அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.