மலையகத்துக்கென விசேட வேலைத்திட்டம் வேண்டும் – வேலுகுமார்

மலையகத்தின் மந்த போசணை தொடர்பில் சபையில் தற்போது பேசுகின்ற நிலையில் அங்கு பட்டினிச் சாவு தொடர்பில் பேசும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக வேலுகுமார் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகப் பெருந்தோட்டங்கள் தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டவர் அந்த வகையில் மலையகத்திற்கான விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலுகுமார் எம் .பி சபையில் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மந்தபோசனை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

சமுர்த்தி உதவி கொடுப்பனவு, அரசாங்கத்தின் விஷேட நிவாரணங்கள் என எதுவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் நிரந்தர வேலை செய்வதாக அதற்கான காரணம் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடுமையான உழைப்பாளர்களான அவர்களுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது.

கோதுமை மா ஒரு கிலோ 360 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 350 ரூபாவாகவும் விற்கும்போது அவர்கள் ஒருவேளை உணவையாவது எவ்வாறு உண்ண முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

பெருந்தோட்ட நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் சிறந்த அனுபவம் கொண்டவர். அதனை கருத்திற்கொண்டு அந்த மக்களுக்கு விசேட நிவாரண திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மந்தபோசனம் தொடர்பில் சபையில் பேசப்படும் நிலையில் மலையக மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles