மலையக சமூகம் கல்வியில் மிகச் சிறந்த சமூகமாக மாற்றம் பெற வழி செய்ய வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.
மலையக இளைஞர்கள், யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் தற்போது சாதித்து வருகின்றனர். அதேநேரம் எமது தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்திற்கு இன்னமும் போராட வேண்டியிருக்கிறது. அத்துடன், வறுமையின் காரணமாக தந்தை வெளியிடத்திற்கும், தாய் வெளிநாட்டிற்கும் தொழிலுக்காக சென்று விடுகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி மீதான கவனம் குறைகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கும் போது, இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானத்தைப் பெறக் கூடியதாக இருக்கும். அதனால் பெற்றோர் வெளியிடங்குச் சென்று பணியாற்றுவதை நிறுத்த முடியும். இதனால் எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான முதலாவது அடித்தளத்தை இடமுடியும்.
அத்துடன், பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் கல்விக்கான தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். திறமைகள் கொட்டிக் கிடக்கும் மலையகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்ற முடியும்.
எமது சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கியுள்ளது. இளைஞர், யுவதிகள் எப்படி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்துள்ளதைப் போல மகச் சிறந்த கல்விச் சமூகமாகவும் மாற வேண்டும். எமது சமூகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.” என்று முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.