கிளங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நீதியான விசாரணை வேண்டும்!

“கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் என்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பின் மிகவும் அறுவருக்கதக்க விடயமாகும். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வைத்தியசாலை நிர்வாகம் சுயாதீனமான, நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

கிளங்கன் வைத்தியசாலை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான ஆதார வைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையினை நம்பியே மலையக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் வைத்தியசாலையினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவதோடு நம்பகத்தன்மையினையும் இல்லாமல் செய்கின்ற விடயமாகும்.

இதுத்தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் பேசி உரிய நடவடிக்கைகளை பக்கசார்பின்றி முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய அனுதாபத்தினையும், கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles